கூடலூர், ஜூன் 5: கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கடசன கொல்லி பழங்குடியினர் கிராமத்தில் ஆரம்ப பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் இலவசமாக பாய்கள் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இங்கு உள்ள ஆரம்ப பள்ளியில் நர்சரி வகுப்புகளில் படிக்கும் குழந்தைகள் பகல் நேரத்தில் ஓய்வெடுப்பதற்காக, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று காவல்துறை சார்பில் பாய்கள் வழங்கப்பட்டன. தேவர் சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, வார்டு உறுப்பினர் அசிஸ் ஆகியோர் முன்னிலையில் தேவர் சோலை காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், சிறப்பு பிரிவு ஆய்வாளர் பாபு ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு பள்ளியில் பகல் நேர உணவுக்கு பின்னர், ஓய்வு எடுப்பதற்காக பாய்களை இலவசமாக வழங்கினர்.