ஈரோடு, மார்ச் 10: நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் விதமாக ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஈர நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடைபெற்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஈரோடு வனக்கோட்ட பகுதிகளில் நேற்று காலை 6:30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நீர் நிலைகளில் உள்ள பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில், ஈரோடு வனக்கோட்டத்திற்குட்பட்ட வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடுமுடி, அவல்பூந்துறை, கனகபுரம், வறட்டுப்பள்ளம், அந்தியூர் பெரிய ஏரி, தண்ணீர் பள்ளம் ஏரி, ஓடாந்துறை ஏரி, ஜர்தல் ஏரி, தாமரைக்கரை குளம், மணியாச்சி பள்ளம் உள்ளிட்ட 21 பகுதிகளில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், வனத்துறை பணியாளர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


