புழல், மே 26: பாடியநல்லூர் ஊராட்சி அலுவலக வளாகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு ஜாகீர் உசேன் (45), கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். வியாசர்பாடியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி (45), தனது கணவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு மனு கொடுத்திருந்தார். இதற்கு ₹5000 கொடுத்தால் சான்றிதழ் வழங்க முடியும் என விஏஓ கூறியுள்ளார். இதனால், மனவேதனை அடைந்த உமாமகேஸ்வரி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம், நேற்று ரசாயனம் தடவிய ₹5 ஆயிரத்தை கிராம நிர்வாக அலுவலரின் புரோக்கர் மணிகண்டனிடம் உமாமகேஸ்வரி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, ஜாகீர் உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.