அரியலூர்,ஜூன்11: அரியலூர் பேருந்து நிலையம் முன்பு அபிநயா கொலைக்கு நீதி கேட்டு அபிநயா கொலைக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூரிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்த பெரம்பலூர் மாவட்டம், அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் அபிநயாவை (21), தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பார்த்திபன்(33) காதலித்து வந்துள்ளார்.
இதற்கிடையே பார்த்திபனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பார்த்திபனை கடந்த மாதம் மே.31 ஆம் தேதி சந்தித்த அபிநயாவை, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற பார்த்திபன் உடையார்பாளையம் அருகே சாலையின் தடுப்பு சுவற்றில் இருசக்கர வாகனத்தை மோதச் செய்தார். இதில் காயமடைந்த அபிநயாவை சாலையோரத்தில் வீசிச் சென்றதில் அபிநயா உயிரிழந்தார். விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பார்த்திபனை கைது செய்தனர்.
இந்நிலையில் அபிநயாவின் கொலைக்கு நீதி கேட்டும், அபிநயாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் அம்பிகா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இளங்கோவன், நிர்வாகிகள் கிருஷ்ணன், சிற்றம்பலம், துரைசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி திருச்சி மண்டலச் செயலர் முடிமன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.