அரசு பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகம் அனுப்பும் பணி தீவிரம் வட்டார கல்வி அலுவலர் தகவல் பெரணமல்லூர் ஒன்றியத்தில்
பெரணமல்லூர், அக்.5: பெரணமல்லூர் ஒன்றிய அளவில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 3692 பேருக்கு தமிழக அரசின் இலவச நோட்டு,பாடபுத்தகம் அனுப்பப்பட்டு வருவதாக வட்டார கல்வி அலுவலர் தெரிவித்தார். தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் நிதி உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பாட புத்தகம், நோட்டு, வண்ண பென்சில் உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாட புத்தகங்கள் மூன்று பருவமாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதல் பருவம் முடிந்து தற்போது இரண்டாம் பருவம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளுக்கு நோட்டு, பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பெரணமல்லூர் ஒன்றிய அளவில் செயல்படும் 91 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 3692 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறந்தவுடன் தமிழக அரசின் இலவச நோட்டு, புத்தகம் வழங்க வசதியாக நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்தார்.


