திருவள்ளூர்: அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், வடகரையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பெறுவதற்காக www.skilltraining.tn.in என்ற இணையதளம் மூலமாக அடுத்த மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். அதன்படி வெல்டர் (மின்சாரப்பணியாளர்), ஒயர்மேன் (மோட்டார் வாகனம்) ஆகிய பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெல்டர், ஒயர்மேன் ஆகிய பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழிற்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங், யூபிஐ மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு வெளியிடப்படும். பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சியில் சேரும் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750 வீதம் வழங்கப்படும்.
மேலும் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை என அரசின் அனைத்து சலுகைகளுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விரிவான விவரங்களுக்கு, www.skilltraining.tn.in என்ற இணைதளத்தில் பார்வையிட வேண்டும். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி மையத்தில் 044-29896032 மற்றும் திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 044-27660250 ஆகிய எண்களில் அணுகி பதிவு செய்திடுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.