Wednesday, June 18, 2025
Home மாவட்டம்சிவகங்கை வைகை ஆற்றில் உயிர் பெறும் நிலத்தடி நீர்

வைகை ஆற்றில் உயிர் பெறும் நிலத்தடி நீர்

by Neethimaan

சிவகங்கை, மே 21:சிவகங்கை மாவட்ட வைகையாற்றில் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் கடந்த சில ஆண்டுகளாக உயிர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட சிலைமான் தொடங்கி பார்த்திபனூர் மதகு அணை வரை வைகை ஆற்றுக்குள் 120 குடிநீர் திட்டங்கள் உள்ளன. நிலத்தடி நீர் பாதிப்பால் தற்போது 56 திட்டங்கள் மூலம் தினமும் ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகிக்கப் படுகிறது. வைகை ஆற்றில் வரும் நீரின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி தாலுகாக்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். விரகனூர் மதகு அணையில் திறந்து விடப்படும் நீர் மானாமதுரை முகப்பு வழியே கீழப்பசலை கால்வாய் வரை வரும். ஆனால் ஆண்டுதோறும் பங்கு நீர் முறைப்படி திறக்கப்படுவதில்லை.

சில ஆண்டுகள் திறப்பதும், சில ஆண்டுக்குள் திறக்காமல் இருப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. மேலும் ஆற்றில் இருந்த நீர்வள ஆதாரங்கள் அனைத்தும் மணல் அள்ளப்பட்டதால் குறைந்தது. ஆற்றுக்குள் சுமார் 350 அடி ஆழத்திற்கும் அதிகமாக போர்வெல் போட்டால்தான் நீர் கிடைக்கிறது. இதனால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட வைகை பகுதியில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு பல மாவட்டங்களுக்கு நீர் எடுக்கப்படும் நிலையில் இம்மாவட்டத்திற்கென குடிநீருக்கான பங்கு நீர் திறக்கப்பட வில்லை. இதனால் பல ஆண்டுகளாக அதிகப்படியான நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தேவைக்காக குறைவான அளவில் நீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு வைகை அணையில் நீர் திறப்பு மற்றும் வைகையாற்று பகுதிகளில் பெய்து வரும் மழை உள்ளிட்டவைகளால் சிவகங்கை மாவட்டம் வைகையாற்று பகுதிகளில் நீர் வரத்து இருந்தது. மேலும் தற்போது கோடை மழை பெய்து வருகிறது.

இதனால் சிவகங்கை மாவட்ட வைகை நீர்வரத்து பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது: ‘‘குடிநீர் திட்டங்கள் மூலம் அதிகப்படியான நீர் எடுக்கப்படுகிறது. இதனால் விவசாயத்திற்கென நீர் திறக்கப்படும் ஆண்டுகளில், அந்த நீர் ஆற்றுப்பகுதிகளில் உறிஞ்சப்படும். இதனால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. வைகையில் பிற மாவட்ட தேவைக்கென அதிகமான குடிநீர் திட்டங்கள் உள்ள பகுதியான சிவகங்கை மாவட்டத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாகத்தான் நீர் திறக்கப்பட்டது. ஆண்டுதோறும் குடிநீருக்கெனவும், விவசாயத்திற்கும் மாவட்டத்திற்குறிய பங்கு நீரை பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குடிநீர் தேவை, நிலத்தடி நீர் வள ஆதாரங்களின் பாதிப்புகள் தடுக்கப்படும் என்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi