தூத்துக்குடி, ஏப். 17: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் தங்களின் நில விவரங்களை பதிவு செய்ய கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெற்று பயன்பெறும் வகையில் விவசாயிகளின் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரிக்க தமிழகத்தில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் பதிவு விவரங்களுடன் ஆதார் எண், கைப்பேசி எண், நில விவரங்கள் இணைக்கும் பணி மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்களிலும், அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. எனவே பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை கட்டணமின்றி உடனே பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான காலக்கெடு ஏப்.15ம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாவட்டத்தில், இதுவரை 71,245 விவசாயிகள் மட்டும் பதிவு செய்துள்ளனர். இன்னும் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே இதற்கான கால அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தில் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேளாண் அடுக்கு திட்டத்தில் நில விவரங்கள் பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
0