சென்னை, நவ.6: சென்னை மாநகரில் சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மாநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003ல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து வேக வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார்.
இந்த குழுவின் ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வேக வரம்பு மற்றும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை போன்ற காரணிகள் ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இலகு ரக வாகனங்கள் 60 கி.மீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் 50 கி.மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கி.மீட்டர் வேகத்திலும், ஆட்டோ 40 கி.மீட்டர் வேகத்திலும் இயக்க வேண்டும். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்க கூடாது என்று மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த புதிய வேக கட்டப்பாடுகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிமீறி விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை யாரேனும் அதிவேகமாக இயக்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு ெசய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், புது வேக கட்டுப்பாடு விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளில், சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.21 லட்சம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.