வெள்ளக்கோவில், செப்.7: வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.75 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளகோவில், தாராபுரம், திருப்பத்தூர், பழனி, லாலாபேட்டை, திருச்சி, கரூர், காங்கயம், பகுதி விவசாயிகள் 152 பேர், 1 லட்சம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம் 1995 மூட்டைகள் வரத்து வந்தது. விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், முத்தூர், காங்கயம், ஊத்துக்குளி ஆர்எஸ், ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் 10 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில், தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80.71க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.59.19க்கும், சராசரியாக ரூ.78க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 75 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.