ஈரோடு, மே 25: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஈரோடு வடக்கு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள தினசரி காய்கறி மார்கெட் அருகில் 3 பேர், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வில்லரசம்பட்டி, தென்றல் நகரைச் சேர்ந்த ஐய்யப்பன் (56), வீரப்பன் சத்திரம், ஜான்சி நகரை சேர்ந்த குணசேகரன் (59), பவானி, காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்த தனசண்முகம் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த ரூ. 300 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், பணம் ரூ. 15,900 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.