மீனம்பாக்கம், மார்ச் 5: சென்னை விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு, நேற்று அதிகாலை ஒரு இ-மெயில் வந்தது. அதில், சென்னை விமான நிலையத்தில், சக்தி வாய்ந்த திரவ நிலையில் ஆன வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் என்றும் இருந்தது. உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் இருந்து, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகம் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சென்னை விமான நிலைய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம், அவசரமாக சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் கூடி, இதுபற்றி அவசர ஆலோசனை நடத்தினர்.
அதோடு விமான நிலையத்தின் அனைத்து பகுதிகள், குறிப்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ஆகியவைகளை முழுமையாக சோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து அந்தமான், டெல்லி, மும்பை உள்ளிட்ட சில இடங்களுக்கு புறப்பட இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களிலும், சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள் நீண்ட நேரம் நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் மற்றும் மர்ம பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இது வழக்கமாக வரும் வெடிகுண்டு புரளி தான் என்று தெரிய வந்தது. இதன்பின்பு சோதனைகள் நிறுத்தப்பட்டு, விமான நிலையம் சகஜ நிலமைக்கு திரும்பியது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து செய்தனர். முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் இருந்து அனிமியா பேகம் என்ற பெயரில் இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரிந்தது. இந்த பெயரில் மிரட்டல் விடுத்த நபர் யார் என விசாரித்து வருகின்றனர். மேலும், சென்னை சைபர் க்ரைம் போலீஸ் மூலம், இந்த மர்ம வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பிய ஆசாமிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்திற்கு கடந்த ஆண்டு முழுவதும், இதுபோல் பலமுறை வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தன. அதன்பின்பு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் பிசிஏஎஸ் எனப்படும் விமான பாதுகாப்பு துறை இணைந்து, இதுபோல் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுபவர்களுக்கு ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று கடுமையான உத்தரவை பிறப்பித்தது. அதன்பின்பு இதே போன்ற வெடிகுண்டு புரளிகள் குறைந்து இருந்தன. ஆனால் இப்போது மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இதைப் போன்ற வெடிகுண்டு புரளி ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.