ஊத்துக்கோட்டை, ஏப். 23: வெயிலின் தாக்கம் அதிகமானதால் பெரியபாளையம் அடுத்த பாளேஸ்வரம் தடுப்பணையில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் மழை நீர் நிரம்பியதும் தண்ணீர் திறக்கப்பட்டால், நாகலாபுரம், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாகச் சென்று பழவேற்காடு கடலில் தண்ணீர் கலக்கும். இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க பெரியபாளையம் பாளேஸ்வரம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பனை கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு பெரியபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கரம்பாக்கம், நெல்வாய் பாளேஸ்வரம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்னையையும் போக்க வேண்டும் என்பதால் தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்நிலையில் பாளேஸ் வரம் தடுப்பணை கடந்த மாதம் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தற்போது தடுப்பணையில் தேங்கியுள்ள தண்ணீர் அளவு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகமானதால் பாளேஸ்வரம் தடுப்பணையில் வேகமாக குறையும் தண்ணீர்
0