ஈரோடு, ஜூலை 7: ஈரோடு வெண்டிபாளையம் கதவணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால், அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வரப்படுகிறது. தொடர் மழை எதிரொலியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த அணைகளில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
அதனைத்தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 58,000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 45,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 58,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 35,500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஈரோடு வெண்டிபாளையம் கதவணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வரப்படுகிறது.