சிவகங்கை, மே 19: சிவக ங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:2025ம் ஆண்டிற்கான வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கான ஒன்றிய அரசின் ஜீவன் ரக்சா தொடர் விருது வழங்கப்படவுள்ளது. நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளில் (1.10.2023ம் தேதிக்கு பிறகு) ஈடுபட்டு, மனித உயிர்களை மீட்பவர்களுக்கு 3பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
அதில், சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கும், உத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கும், ஜீவன் ரக்சா பதக்கமானது தனக்கு காயம் ஏற்படினும், வீரத்துடன் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கும் வழங்கப்படுகிறது. வயது வரம்பின்றி இரு பாலரும் 31.7.2025 மாலை 5மணிக்குள், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.