Monday, June 5, 2023
Home » வீட்டு வாசலில் பூசணிப்பூவை ஏன் வைக்கிறோம்?

வீட்டு வாசலில் பூசணிப்பூவை ஏன் வைக்கிறோம்?

by kannappan
Published: Last Updated on

பூசணி தமிழ்நாட்டுக்கே உரிய கொடிவகைத் தாவரமாகும். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில், அதிகமாகப் படர்ந்து மிகுதியாகப் பூக்கும். இது கொடியாகத் தரையில் படரும், கூரை வீடுகள் மீது ஏறிப் படர்வதும், அதிகமாக இருக்கும். கொடியின் தண்டுகள் குழல் போன்றவை. இலைகள் அகலமாக இருக்கும். காய்கள் பெரிய அளவிலானவை. பூசணிப்பூ, பொன்மஞ்சள் நிறமானது. இந்திரனுக்குப் பிரியமானது. மழை மேகங்களுக்கு இடையே தோன்றும் இடியின் தேவதைகளே, பூமியில் பூசணிக் கொடியாகவும், மலராகவும் தோன்றுகின்றன என்று நம்பப்படுகின்றது. மார்கழி மாதம் முழுவதும், வீட்டுவாசலில் (வழக்கத்தைவிட) பெரியபெரிய கோலங்களிட்டு, அதை வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்வார்கள். அதன் நடுவில், சாண உருண்டைகளை பிடித்துவைத்து, அதன்மீது பூசணிப் பூக்களைப் பொருத்தி வைக்கின்றனர்.சாண உருண்டைமீது பூசணிப் பூக்களை வைப்பதற்குப் பலவிதமான வரலாறுகள் சொல்லப்படுகின்றன. சாணமும், அதை வைத்து மெழுகிய இடமும், லட்சுமியின் வாசஸ்தலமாகும். லட்சுமியை வரவேற்கும் வகையில், வீட்டு முற்றத்தைச் சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு இந்திரனுடன் அவளை வரவேற்கவே, `இந்தரமேகபுஷ்பமான’ பூசணிப் பூக்களை வைக்கிறோம் என்கின்றார்கள். வானத்தில் தோன்றும் இடிகள், சாணக் குவியல்கள் மீது விருப்பமுடன் பாய்ந்திருக்கும் என்பதால், இடியின் மலர்களான பூசணிப் பூக்களைச் சாண உருண்டையின் மீது பொருத்தி வைக்கின்றனர் என்றும் கூறுவதுண்டு. இந்த வழக்கத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இந்தச் சாண உருண்டைகளை முற்பகலுக்கு மேல் எடுத்துச் சுவரில் பூவுடன் சேர்த்து வறட்டியாகத் தட்டுவர். அது காய்ந்ததும், எடுத்துச் சேகரித்து வைத்து, தைப் பொங்கல் நாளில் மூட்டும் அடுப்புத் தீக்கு எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பொங்கலின் போது, பெரிய சல்லடையில் பூசணி இலைகளில் பொங்கலை வைத்து, படைப்பதே வழக்கமாகும். இந்திரன் ஆயிரம் கண்களை உடையவன். சல்லடைக்கும் ஆயிரம் கண்கள். இதனால் சல்லடையை இந்திரனின் வடிவமென்று கருதுகின்றனர்.சல்லடையில் பூசணி இலைகளை வைத்து, அதில் பொங்கலை இட்டுத் தெய்வங்களுக்குப் படைக்கின்றனர். போகியும் பொங்கலும் இந்திரனோடு தொடர்புடையவையாகும். பூசணியில் பலவகை உள்ளன. நாட்டுப் பூசணி, கல்யாண பூசணி ஆகியவை முக்கியமானவை. கல்யாண பூசணிக்காயை இந்திரனின் யானையான ஐராவதத்திற்கு ஒப்புமையாகக் கூறுவர். அதைத் தெய்வங்களுக்குப் பலியாக அளிக்கின்றனர். அதனால், அதை தேவையின்றி வெட்டிக் கூறுபோடக் கூடாது. கல்யாண பூசணி, திருஷ்டி தோஷங்களைப் போக்குவதும்கூட. அதனால், அதைத் திருஷ்டி நீங்க வீட்டின் வாசலில் கட்டித் தொங்கவிடுகின்றனர். அது தீயசக்திகளை, அமானுஷ்ய தீமை செய்யும் எண்ணக் கதிர்களை இழுத்து அழிப்பதாகும்.பூசணி பூத்ததுதிருமூலர் ‘‘பூசணிப் பூவை’’ திருமந்திரத்தில் குறித்துள்ளார். `சூன்ய சம்பாஷணை’ எனும் பகுதியில் வழுதலை வித்திட பாகல் முளைத்ததுபுழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்ததுதொழுதுகொண்டு ஓடினர் தோட்டக்குடிகள்முழுதும் பழுத்தது வாழைக்கனியேஇதன் மேம்போக்கான பொருள், கத்தரியை விதைத்தேன் பாகற்காய் முளைத்தது. புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது. அதைக் கண்டு தோட்டக்குடிகள் அஞ்சி ஓடிவிட்டனர். முழுவதுமாக பழுத்தது வாழைக்கனியே என்பதாகும். இந்த பாடலின் பொருள், சம்பந்த சம்பந்தமில்லாமல் கூறப்பட்டது போலிருக்கிறதல்லா?இதன் நுண்பொருள், ஞான சாதனமாகிய (கத்தரி) விதையை விதைத்தேன் எனக்குள் வைராக்கிய (பாகல்) தோன்றியது. அதன் மூலம் (புழுதியைத் தோண்டுதலாகிய) ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். அதன் பயனாய் மஞ்சள்மய பொன்னிறமான ஞான மலர் (பூசணி) பூத்தது. சரீரமாகிய தோட்டத்தில், அதுவரை இருந்த அட்சரங்களாகிய இந்திரிய சுகத்தில் ஆழ்த்தும், குடிகள் விலகினர். வாழ்வில் தலைமைப் பேற்றை அளிக்கும் சிவம் (வாழை) கனிந்தது என்பதாகும்.இங்கே பூசணிப் பூ மலர்வது, யோகிகள் கூறும் சகஸ்ராரமாகிய தாமரை (ஆயிரம் இதழ்களைக் கொண்ட மலர்) மலர்வதற்கு ஒப்புமையாகச் சொல்லப்பட்டுள்ளது.தொகுப்பு: அருள்ஜோதி

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi