உளுந்தூர்பேட்டை, மே 6: வீடுகளில் பித்தளை பாத்திரங்கள் திருடிய வாலிபரை ெபாதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம்.குண்ணத்தூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளில் இருக்கும் பித்தளை பொருட்கள் திருட்டு போனது. இது தொடர்பாக பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வந்த நிலையில், நேற்று காலை சந்தேகத்துக்கு இடமாக சுற்றி வந்த ஒரு வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து விசாரித்ததில், அந்த வாலிபர் கிளியூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) என தெரியவந்தது. இவர் வீடுகளில் பித்தளை பொருட்களை திருடி உளுந்தூர்பேட்டையில் உள்ள இரும்பு கடையில் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இந்த வாலிபரை பிடிக்கும்போது கையை கடித்ததால் அப்பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்து திருநாவலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து பின்னர் போலீசார் வந்தவுடன் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (21) என்பவர் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் இருந்த ரூ.6 ஆயிரம் மதிப்பிலான பித்தளை பொருட்களை பிடிபட்ட நபர் திருடி விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.