பேரணாம்பட்டு, மே 26: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் புகுந்து 2 காட்டு யானைகள் மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கள், அரவட்லா, கோட்டையூர், எருக்கம்பட்டு, குண்டலபல்லி, கோக்கலூர், முத்துக்கூர், டிடி மோட்டூர், கொண்டமல்லி, பத்தலபல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. அங்குள்ள வனவிலங்குகள் உணவுகள் மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது அருகிலுள்ள விவசாய நிலங்களிலும், கிராமங்களிலும் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் விவசாய நிலத்தில் 2 காட்டு யானைகள் புகுந்து, 5 மின்வேலி கம்பங்களையும், மா மற்றும் தென்னை மரங்ளை முறித்து சேதப்படுத்தியது. மேலும் மாங்காய்களை சாப்பிட்டு கொண்டிருந்தது. யானையின் பிளீறல் சத்தம் கேட்டு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனே இது குறித்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்து வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் 2 காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர் காலை 6 மணியளவில் வனத்துறையினர் காட்டு யானைகளால் சேதமான விவசாய நிலத்தினை பார்வையிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அதிகாலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.