நாகப்பட்டினம், ஜூன் 25: பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் தொடர்ந்து தவணைத்தொகை பெற வேளாண் அடையாள எண் பெற வேண்டும் என திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவித் தொகை ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒன்றிய அரசால் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு தவணைத்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும். அடையாள எண் பெறாமல் உள்ள விவசாயிகள் அடையாள எண் பெற்றால் மட்டுமே பிரதம மந்திரியின் கிசான் மற்றும் பயிர்க்காப்பீடு திட்ட பலன்கள் கிடைக்கும். எனவே இது வரை அடையாள எண் பெறாத விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல் போன் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ அல்லது தங்கள் வேளாண்மை விரிவாக்க பணியாளரையோ அணுகி பதிவு செய்து அடையாள எண் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.