Saturday, July 12, 2025
Home மாவட்டம் விழுப்புரம் நகரில் டிராபிக் ஜாம் ஏற்படுவதால் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விழுப்புரம் நகரில் டிராபிக் ஜாம் ஏற்படுவதால் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

by Karthik Yash

விழுப்புரம், மே 16: விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையோரம் உள்ள கடைகள், கட்டிடங்கள், விளம்பர பதாகைகள், பெயர் பலகை உள்ளிட்டவைகளை அகற்றினர். விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும் கிழக்கு பாண்டி ரோடு, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கடைகள் ஆக்கிரமிப்பால் சாலை குறுகி போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை முழுமையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்திட வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தன.

அதன்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை தானாக முன் வந்து அகற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. விழுப்புரம் சிக்னல் பகுதியில் தொடங்கி பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ரயில்வே பேருந்து நிறுத்தம் என மகாராஜபுரம் வரை நகரப்பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், மேற்கூரைகள், விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.

அதேபோல் மற்றொரு பக்கம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அய்யங்கோயில்பட்டு பகுதியில் தொடங்கி ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்கள், மேற்கூரைகள் உள்ளிட்டவைகளை அகற்றினர். இந்த பணிகளில் 5க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உத்தண்டி மேற்பார்வையில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏஎஸ்பி ரவீந்திரகுமார்குப்தா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியதால் மற்ற வாகனங்கள் ெசல்வதில் சிரமம் ஏற்பட்டு காட்பாடி ரயில்வே மேம்பாலம், கிழக்கு பாண்டி ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi