விழுப்புரம், மே 28: காதலன் ஏமாற்றியதாக கூறி போலீஸ் நிலையம் முன் அமர்ந்து காதலி தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகள் அக்சிலியா ஜெயசீலி (34). இவர் நேற்று மாலை விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கூறினர்.
போராட்டத்துக்கான காரணம் குறித்து அப்பெண் கூறுகையில், நானும், தெளி கிராமத்தை சேர்ந்த அன்ட்ரோ ஜெயகுமார் (30) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்தோம். அதுவும், இவர் அவரது உறவினர் வீட்டுக்கு வந்தபோது என்னுடன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து காதலித்தோம். அப்போது, அவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னோடு பலமுறை நெருங்கி பழகினார்.
இந்நிலையில், அவர், கடந்த ஒரு மாதமாக என்னிடம் சரியாக பேசாததை கண்டு சந்தேகமடைந்து நான் விசாரித்தபோது, அவரது பெற்றோர் வேறொரு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நான் அவரிடம் சென்று கேட்டபோது, திருமணம் செய்ய முடியாது என கூறி என்னை மிரட்டி அனுப்பினார்.
தொடர்ந்து, நான் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அன்ட்ரோ ஜெயக்குமார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் தர்ணா செய்ததாக தெரிவித்தார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அப்பெண் போராட்டத்தை கைவிட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.