திருவலம், அக்.27: காட்பாடி தாலுகா திருவலம் பேருராட்சி பொன்னையாற்றங்கரையில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் நால்வரால் பாடப்பெற்ற சிறப்பு தலமாகும் கோயில் மூலவர் சன்னதி முன்பகொடிமரத்திடம் நந்தியம்பெருமான் மூலவரைப் புறம் நோக்கி கிழக்கு நோக்கி இருப்பது தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா,நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனம், மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம்,பிரதோஷ வழிபாடுகள் மற்றும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதோஷத்தையொட்டி நேற்று காலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்ட தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை மூலவர் சன்னதி முன்பு உள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு விபூதி, பால் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு நந்தி வாகனத்தில் சிவபெருமான் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. இதில் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.