திருவாரூர், மே 8:திருவாரூர் நகராட்சி பகுதியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கட்சி கொடி மரங்கள் அகற்றப்பட்டன. மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் இருந்து வரும் கட்சிக்கொடி கம்பங்கள் மற்றும் மேடைகளை அகற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் பொது இடங்களில் இருந்து வரும் கட்சி கொடி மரங்கள் மற்றும் மேடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனையொட்டி திருவாரூர் நகர் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகம் முன்பாகவும் மற்றும் கிடாரங்கொண்டான், வாழவாய்க்கால், கொடிக்கால் பாளையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த மொத்தம் 52 கொடி மரங்கள் நகராட்சி கமிஷனர் தாமோதரன் முன்னிலையில் ஊழியர்கள் மூலம் ஜே.சி.பி, இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.