விருத்தாசலம், ஜூன் 28: விருத்தாசலம் அருகே 6 பேரை திருமணம் செய்து நகை, பணம் ஏமாற்றிய கல்யாண ராணி குறித்து போலீசில் 6 பேர் புகார் அளித்துள்ளனர். சென்னை சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முகமது அப்பாஸ் (58). கறிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு வீட்டு வேலைக்காக விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியை சேர்ந்த பெண் சேர்ந்துள்ளார். 3 மாதம் மட்டும் வேலை செய்துள்ளார். அப்போது அப்பாசுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கத்தின் அடிப்படையில் அவருக்கு அப்பாஸ் கடனாக ரூ.6 லட்சம் பணமும், 8 பவுன் நகையும், அரை கிலோ வெள்ளி பொருட்களும், வெள்ளி கொலுசு மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார். பின்பு இந்த பணத்தையும் நகையையும் திரும்ப கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் விருத்தாசலம் வந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி அப்பாஸ் விருத்தாசலம் வந்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டபோது தர முடியாது என மறுத்து மகன்களுடன் சேர்ந்து திட்டி, தாக்கி, கழுத்தில் கத்தி வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பாஸ் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்த பெண் குறித்து அப்பாஸ் கூறும்போது, ‘எனக்கு கணவர் கிடையாது, உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் என கூறி ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்டு பணம், பொருட்களை வாங்கியுள்ளார். என்னை பிரிந்த பிறகு விருத்தாசலம் வந்து விசாரித்தபோதுதான் அவர் இதுபோன்று ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமும் பணம் மற்றும் நகைகள் வாங்கி ஏமாற்றி வந்துள்ளார்’ என தெரியவந்துள்ளது.
இதுபோன்று அந்த பெண் மீது மேலும் 5 பேர் புகார் அளித்துள்ளனர். அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த முகமது சேட்டு மகள் புகார் அளித்துள்ளார். அதில் எனது தந்தையுடன் அவர் சில நாட்கள் மனைவியாக வாழ்ந்தார். அவரிடமும் நகை, பணமும் அபேஸ் செய்துள்ளார் என்று கூறி உள்ளார். அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த இப்ராகிம் என்பவர் ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் பைனான்ஸ் எடுத்து கொடுத்ததாகவும், தன்னையும் திருமணம் செய்து கொண்டு சில நாள் இருந்ததாகவும் அப்பெண் மீது புகார் அளித்துள்ளார்.
அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்கிற ரபீக் என்பவர் தன்னையும் திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் இருந்துள்ளார். அப்போது அவருக்கு ரூ.2 லட்சம் பைனான்ஸ் எடுத்து கொடுத்தும் வீடு வாடகைக்கு அட்வான்ஸ் ரூ.70 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தார். அதுபோல் விழுப்புரத்தைச் சேர்ந்த முஸ்தபா என்பவரின் மனைவி தனது கணவருடனும் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருந்ததால் கணவரை விவாகரத்து செய்து வாழ்க்கை இழந்துள்ளேன் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா முகமது என்பவரையும் திருமணம் செய்து ஏமாற்றி அவரை பிரிந்து வந்துள்ளதாகவும், இதுபோல் மொத்தம் 6 பேரை திருமணம் செய்து அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வந்ததாகவும் தற்போது விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே உள்ள ஒரு டீ கடையில் அப்பெண் வேலை செய்து வருவதாகவும், இதனால் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன.
தொடர்ந்து அனைவரது புகார்களையும் பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஒருவர் 6 பேரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி பணம், நகைகளை பறித்து சென்ற சம்பவம் குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் 6 பேரின் உறவினர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவியது.