விருத்தாசலம், நவ. 6: விருத்தாசலம் எம்.ஆர்.கே நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வெற்றிசுந்தர்(29). இவருக்கும் புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வெற்றிசுந்தர் தனது நண்பர் கணேசனுடன் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த அருண் மற்றும் ரியாஸ் ஆகியோர் வெற்றிசுந்தருடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அசிங்கமாக திட்டி தாக்கியதுடன், கையில் வைத்திருந்த கத்தியால் வெற்றிசுந்தரின் தலையில் வெட்டினர். இதில் காயம் அடைந்த வெற்றிசுந்தர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அருண், ரியாஸ் ஆகியோர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.