சேலம், ஜூன் 24: சேலம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். வியாபாரியான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சேலம் வந்துவிட்டு, டூவீலரில் வீட்டிற்கு செல்ல புதுரோடு அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 3 பேர், மிகவும் வேகமாக மோதுவது போல சென்றுள்ளனர். அவர்களை ராமச்சந்திரன் எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவர்கள், ராமச்சந்திரனை ஹெல்மெட்டால் அடித்துவிட்டு, அவரிடம் இருந்த 2 செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சூரமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக சேலத்தாம்பட்டி ஜெ,ஜெ நகரை சேர்ந்த தனுஷ்(21), சோளம்பள்ளம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மேகவன்(28), மற்றும் சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.