அவனியாபுரம், ஜூன் 7: மதுரையில் பெருங்குடி அருகே நடந்த டூவீலர் விபத்தில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை, அவனியாபுரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சரவணகண்ணன்(25). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த மே 23ம் தேதி, அவனியாபுரத்தை சேர்ந்த நண்பர் சோனை முத்து(25) என்பவருடன் விருதுநகரில் நடந்த நண்பரின் இல்லவிழாவில பங்கேற்றார். பின்னர் இருவரும் பைக்கில் மதுரை வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை சரவணகண்ணன் ஓட்டி வந்தார்.
அவர்கள் பரம்புபட்டி சுற்றுச்சாலை அருகே வந்தபோது, சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு மீது அவர்கள் டூவீலர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சரவணகண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.