திருவள்ளூர் நவ. 9: தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018ம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனைகளை விதித்தது. மேலும் உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது குறித்த உறுதிமொழியினை, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஓ.சுகபுத்ரா தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் ஸ்ரீலேகா, சபரிநாதன் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒலி அறிவுப்புகளுடன் கூடிய 5 ஆட்டோக்கள் மூலம் நேற்று முதல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 தினங்களில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஓ.சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 300 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியையும் கூடுதல் கலெக்டர் கொட்டியசைத்து துவக்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் மஞ்சப்பைகளை வழங்கினார்.
தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரங்கள்
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சின்ன காவனம், மெத்தூர், உப்பளம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணி, மாவட்ட உதவி அலுவலர் சுப்பிரமணி ஆகியோர்கள் மேற்பார்வையில் தீயணைப்புத் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பது பற்றிய, செய்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கும் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும் முறைகள் குறித்து நிகழ்ச்சியினை நடத்திக் காட்டினார். இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவிகள் பட்டாசுகள் வெடிப்பதற்கு முன்பாக தண்ணீரும், மணலும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் துணையுடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், அதிக ஒழியை ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொன்னேரி தீயணைப்பு துறை அலுவலர் சம்பத் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன், விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியும், துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் விளக்கம் அளித்தார்.