மதுரை, ஜூலை 2: விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக மேம்பாலங்களில் அதி வேகத்திலும், ஒருவழிப்பாதையிலும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரையின் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது.
இதன்படி, ராமேஸ்வரம் – கொச்சி சாலையில் மதுரை – தேனி மார்க்கத்தில் முடக்குச் சாலை சந்திப்பில் ரூ.53 கோடியில் புதிதாக நான்கு வழிச்சாலையுடன் கூடிய இருவழித்தடம் கொண்ட மேம்பாலமும், தத்தனேரி மேம்பாலத்தில் ரூ.9.50 கோடியில் ஒரு வழித்தடம் கொண்ட இணைப்பு பாலமும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. எனினும், இந்த பாலங்களில் வாகன ஓட்டிகள் எதிரெதிர் திசையில் வருவது, அதிவேகத்தில் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் காயமடைகின்றனர்.போக்குவரத்து போலீசார் தரப்பில் எச்சரிக்கை பலகைகள் வைத்தும் பலனில்லை. எனவே, இரண்டு பாலங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.