ஈரோடு, ஆக. 31: ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சிவா (43). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி தமிழ்செல்வி (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சிவாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிவா தொழிலையும் சரிவர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன் தினம் காலையில் தங்களது உறவினர் ஒருவரைப் பார்க்க தமிழ்செல்வி சென்றுவிட்டார். மகளும் பள்ளிக்கு சென்றுவிட்டார். வெளியில் சென்றிருந்த சிவாவின் மகன் மாலையில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் உள் அறையில் சிவா, சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சிவா இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விஷ மாத்திரைகள் சாப்பிட்ட கொடுமுடியை அடுத்துள்ள, சாலைப்புதூர், அண்ணா நகரைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி சக்திவேல் (44). எனபவர் கரூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, கொடுமுடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.