அரியலூர், ஆக.19:அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் உள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம், ஆதிகாலத்தில் கடல்பகுதியாக இருந்ததால் இப்பகுதிகளில் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் படிமங்கள் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் படிமங்கள், புதைப்படிவ பொருட்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் காணும் வகையில் வாரணவாசி கிராமத்தில் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் டைனோசர் முட்டை, கனிமதாது, புதைப்படிவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய பொருட்கள் பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை தினமும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று வாரணவாசி புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அருங்காட்சியகம் தொடர்பான பல்வேறு தகவல்கள் அடங்கிய குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டதையும் பார்வையிட்டார். இந்த ஆய்வில் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள தொன்மையான அரிய பொருட்கள் குறித்து கேட்டறிந்தும், நேரில் பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.மேலும், அருங்காட்சியகத்திற்கு தினமும் வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, அருங்காட்சியகம் செயல்படும் நேரம், விடுமுறை நாட்கள், பாதுகாப்பு வசதிகள், தேவைப்படும் கூடுதல் வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இதேபோன்று அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கு தேவையான வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்தி தரவும், அருங்காட்சியகத்தை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிப்பதுடன், அருங்காட்சியகத்திற்கு தேவைப்படும் கூடுதல் வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் கண்ணன், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.