ஈரோடு, ஜூலை 6: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் அமராவதி புதூரில் ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
அதன்பேரில், கொளத்துப்பாளையம் விஏஓ சிவசங்கர் மற்றும் கொடுமுடி போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கும் எனவும், உடல் முழுவதும் தோல் உரிந்த நிலையில் காணப்பட்டது.
இறந்தவருக்கு நெற்றியில் பழைய காயத்தழும்பு இருந்தது. ஆனால், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மேலும், இறந்தவர் வாய்க்காலில் மூழ்கி இறந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.