ரிஷிவந்தியம், ஜூலை 2: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாகல்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை (70). இவரது மனைவி மணியம்மாள் (65). இவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவரும் வீட்டின் முன்புள்ள வராண்டாவில் படுத்து உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களது வீட்டின் பின்புறத்தின் வழியாக சுமார் இரவு 12 மணிக்கு மேல் இரண்டு கதவுகளின் தாழ்ப்பாள்களையும் உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
பின்புறத்தில் ஏதோ சத்தம் கேட்கிறது என்று எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க வாசலின் 2 கதவுகளும் உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோ முழுவதும் உடைக்கப்பட்டு துணிகள், நகைகள் வைத்திருந்த மணி பர்ஸ் மற்றும் நகை பெட்டி ஆகியவை வெளியே கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த பகண்டை கூட்டு சாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், 1 1/2 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.