சேலம், ஆக.31:தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் மற்றும் வாக்குசாவடி மறு சீரமைப்பு 2024குறித்து சேலம் வடக்கு, சேலம் தெற்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தலைமை வகித்தார். கூட்டத்தில், வாக்குப்பதிவு நிலையங்களை இடமாற்றுதல், வாக்குச்சாவடியின் கட்டட மாற்றம், வாக்குச்சாவடியின் பெயர் மாற்றம், புதிதாக உருவாக்குதல் 1500க்கும் அதிகமாக உள்ள வாக்காளர்களின் வாக்குச்சாவடிகளை கண்டறியப்பட்டு கூடுதலாக துணை வாக்குச்சாவடி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஆண், பெண்இருபாலருக்கும் தனித்தனியாக வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்தும், ஒரு சில வாக்குச்சாவடிகளில் தொலைதூரத்தில் இருப்பதை கண்டறிந்து அதனை வாக்காளர்களின் வசதிக்கு ஏற்ப வாக்குச்சாவடிஅமைத்து தருதல் குறித்தும் கேட்டறியப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த வசதிகள் செய்து தருவதும், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு, இறப்பு, இடமாற்ற வாக்காளர்களை நீக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், திமுக சார்பில் மாநகர துணை செயலாளர் கணேசன், பகுதி செயலாளர் ஜெய், அதிமுக சார்பில் பாலசுப்பிரமணியம் எம்எல்ஏ,பகுதி செயலாளர் ஜெயபிரகாஷ், மற்றும் தேமுதிக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.