பட்டுக்கோட்டை, ஜூன். 2: வழக்கில் ஜாமீன் எடுக்கவில்லை என மனைவியை பூச்சி கொல்லி மாத்திரை கொடுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். பட்டுக்கோட்டை அடுத்த முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் (50). இவரது மனைவி சரஸ்வதி (47). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பால்ராஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் வழக்கு ஒன்றில் சிறைக்குச் சென்றார். இதனால் பால்ராஜ் தன்னை ஜாமீனில் எடுக்க தனது மனைவி சரஸ்வதியிடம் கூறியுள்ளார். ஆனால் சரஸ்வதி தனது கணவர் பால்ராஜை ஜாமீனில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பால்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையிலிருந்து வெளியில் வந்தார். என்னை ஏன் ஜாமீனில் எடுக்கவில்லை? என மனைவி சரஸ்வதியிடம் பால்ராஜ் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் பூச்சிக்கொல்லி மாத்திரையை வாங்கி வந்து வீட்டிலிருந்த மனைவி சரஸ்வதியை பிடித்து, அவரது வாயில், வலுக்கட்டாயமாக பூச்சிக்கொல்லி மாத்திரையை கொட்டி தண்ணீரை ஊற்றி சாப்பிட வைத்துள்ளார்.
சரஸ்வதியின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து விசாரித்தனர். பிறகு சரஸ்வதி நடந்ததை கூறி அழுதுள்ளார். தொடர்ந்து சரஸ்வதியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி இறந்தார். இது குறித்து இவரின் மகள் பாகம்பிரியாள் பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுக்கா போலீசார் வழக்குப் பதிந்து பால்ராஜை நேற்று கைது செய்தனர்.