ஜெயங்கொண்டம், ஜூலை 4: வளர்பிறையில் வரும் அஷ்டமி காலபைரவருக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை ஒட்டி ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. யாகத்தில் மஞ்சள், குங்குமம், வெட்டிவேர், நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் மா, பலா, வாழை, திராட்சை, மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் இடப்பட்டன. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதே போல், ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் மாரியம்மன் கோயிலிலும் கால பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.