ஈரோடு, ஆக. 12: ஈரோடு, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கல்வித்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளையும் துரிதப்படுத்தி விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், ஆசனூர் வன அலுவலர் சுதாகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், (வளர்ச்சி) செல்வராஜன், கோட்டாட்சியர்கள் சதீஸ்குமார், திவ்யபிரியதர்ஷினி. ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஈரோடு மோகன், பெருந்துறை உதயகுமார், மருத்துவர்கள் மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.