வல்லம், ஏப்24: தஞ்சை அருகே கூடலூர் முனியாண்டவர் கோயில் அருகில் கஞ்சா வைத்திருந்த 2பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் கூடலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள முனியாண்டவர் கோயில் அருகில் சந்தேகப்படும்படி 3பேர் நின்று இருந்தனர். இதில் போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடியிருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மற்ற இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கூடலூர் சின்னத்தெரு ஜெயராமன் மகன் செந்தில்நாதன்(45) மற்றும் ராஜேந்திரன் மகன் சிவக்குமார்(24) என்பது தெரியவந்தது.
போலீசார் அவர்களை சோதனை செய்த போது, விற்பனைக்காக 1,100 கிலோ கிராம் கஞ்சா வைத்துள்ளது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ 11,000 என கூறப்படுகிறது. இதையடுத்து தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்நாதன், சிவக்குமார் இருவரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் செந்தில்நாதன் மீது தாலுகா போலீசில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய கூடலூர் பகுதியை சேர்ந்த குரு என்பவரின் மகன் ஈஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.