காரைக்குடி, ஏப்.24: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு(எப்இஆர்ஏ) அறிவித்துள்ள போராட்டங்களில் தமழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கலந்து கொள்ளாது என அதன் மாநில பொதுச்செயலாளர் செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ‘‘வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பெரா அண்டு பெட்ரா கூட்டமைப்புகள் நாளை முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை பல்வேறு கட்டங்களில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் அரசு அங்கீகாரம் பெற்று 6000க்கும் மேல் உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் (டிஎன்விஏஓஏ) கலந்து கொள்ளவது இல்லை என முடிவு எடுத்துள்ளோம்.
பல்வேறு அரசியல் கட்சியின் அழுத்தத்தின் காரணமாகவே இந்த கூட்டமைப்பினர் போராட்டங்களை அறிவித்துள்ளனர் என தோன்றுகிறது. பணப்பலன் சாராத பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
சட்டப்பேராவையில் நடந்து முடிந்த வருவாய்துறை மானியக் கோரிக்கையில் வட்டாசியர் அனைவருக்கும் புதிதாக ஜீப், பல்வேறு வருவாய் பிர்காக்களை பிரித்தல் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு குடியிருப்பு கட்டுதல் போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டம் என்பது பல அழுத்தங்களுக்கு இடையே நடத்தப்படும் போராட்டம். மேலும் பல்வேறு சங்கங்கள் ஒன்றாக இணைந்து வருவாய்துறையே ஜம்பித்து போவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். எங்கள் சங்க கோரிக்கைகளை முதல்வர் மற்றும் வருவாய்துறை அமைச்சர் கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள். இந்த கூட்டமைப்பில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் இல்லை, கலந்து கொள்ளவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.