வேப்பூர், ஜூன் 1: விருத்தாசலம் அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை மண்ணெண்ணைய் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை அடுத்த கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி அபிநயா (22). இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. 9 மாதத்தில் ஆதித்யா என்ற ஆண் குழந்தை உள்ளது. ஏழுமலை இலங்கையில் இன்ஜினியராக வேலை செய்தார். இந்நிலையில் திருமணத்தின்போது 40 சவரன் நகை போடவில்லை என்று கூறி வரதட்சணை கேட்டு கணவர் ஏழுமலை, மாமனார் வீராசாமி, மாமியார் தனக்கொடி, நாத்தனார் சுசிலா ஆகியோர்அபிநயாவை கொடுமைப்படுத்தி வந்தார்களாம். சம்பவத்தன்று அபிநயாவை 4 பேரும் இரும்பு பைப்பால் தாக்கி அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துக்கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அபிநயா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார், ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.