கோவை, மே. 8: கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னையில் இருந்து மதியம் 2 1/2 மணிக்கு வந்தே பாரத் ரயில் கோவைக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி பிற்பகல் சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் இரவு 8 மணியளவில் கோவை அருகே வந்து கொண்டிருந்தது. சிங்காநல்லூர் – பீளமேடு இடையே வந்தபோது, யாரோ அந்த ரயில் மீது கல் வீசி தாக்கினர். இதனால் ரயில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரயில் மீது கல் வீசி தாக்கியது பீளமேடு பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். ரயில்கள் மீது தொடர்ந்து கல் வீசப்படும் சம்பவம் கோவையில் நடப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.