வந்தவாசி, பிப். 28: வந்தவாசி அடுத்த ஓசூர், காவணியாத்தூர், வெண்மந்தை, பாதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கான மனுநீதி நாள் முகாம் நேற்று ஓசூர் கிராமத்தில் நடந்தது. ஆரணி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் தலைமை தாங்கினார். எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், செய்யாறு சப் கலெக்டர் பல்லவி வர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு ₹1.10 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு கடன் உதவி தாட்கோ மூலமாக கடனுதவி, வேளாண்மை துறை சார்பில் விவசாய இடுபொருள், கைத்தெளிப்பான் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் குமரன், ஒன்றிய செயலாளர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் நந்தகோபால், ஒன்றிய அவைத் தலைவர் பிலோமின் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெண்மந்தை சிவா, பாதூர் குமார், மாவட்ட பிரதிநிதி ஆதிகேசவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.