வத்திராயிருப்பு, மே 7: வத்திராயிருப்பில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாட்டையா (எ) மாரியப்பன் (58). கொத்தனார். மனைவி பரமேஸ்வரி (55). இவர்களுக்கு 2 மகள்கள். இதில் ஒரு மகள் கணவனை பிரிந்து இவர்களோடு வாழ்ந்து வந்தார்.
அவரை பரமேஸ்வரி சமாதானம் பேசி கணவனோடு சேர்த்து வைத்தார். இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை மாரியப்பன், பரமேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த மாரியப்பனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ராஜபாளையம் அருகே உள்ள ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.