வடமதுரை, மே 24: வடமதுரை அருகே தென்னம்பட்டியில் உள்ள மந்தை குளத்தில் நேற்று முன்தினம், பள்ளி மாணவன் நிஷாந்த் (13) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில், குளத்தில் மண் அள்ளியதால் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் சிக்கி மாணவர் உயிரிழந்ததாகவும், அதனால், குளங்களில் சட்ட விரோதமாக மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாணவரின் உறவினர்கள், ஒட்டன்சத்திரம்-வடமதுரை மாநில நெடுஞ்சாலையில் தென்னம்பட்டி நான்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா, இன்ஸ்பெக்டர் வேலாயுதம், மற்றும் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.