ஓசூர், ஜூலை 23: தென்காசியை சேர்ந்தவர் அபுபக்கர் (34), லாரி டிரைவர். இவர் சென்னையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு, பெங்களூரு நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார். ஓசூர் தொரப்பள்ளி அருகே சென்ற போது, லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு தூங்கினார். அப்போது, சட்டையை கழற்றி வைத்திருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் அபுபக்கரின் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் மற்றும் ₹2 ஆயிரத்தை எடுத்தனர். சத்தம் கேட்டு எழுந்த அபுபக்கர் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்போன், பணத்துடன் தப்பியோடி விட்டனர். இதுபற்றி அபுபக்கர் அளித்த புகாரின் பேரில், அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன், பணத்தை திருடிச்சென்ற 2பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.