பணகுடி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அரிசி ஆலையிலிருந்து நாகர்கோவில் மார்க்கெட்டிற்கு தினமும் அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றிச்செல்வது வழக்கம். அதன்படி நேற்று ஆலங்குளத்தில் இருந்து சுமார் 500 அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பணகுடி ரோஸ்மியாபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து விபின் (32) என்பவர் தனது பைக்கில் வந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதாக தெரிகிறது. இதனால் லாரி கட்டுப் பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்தன. தகவலறிந்து பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த விபினை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.