சென்னை, ஜன.18: ரெட்டேரி சந்திப்பில் குடிநீர் குழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளதால், 5 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் இரண்டு நாள் நிறுத்தப்படுகிறது என்றும், லாரிகள் மூலம் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாதவரம் மண்டலம், ரெட்டேரி சந்திப்பு அருகில் 200 அடி சாலையில் அமைந்துள்ள சேவை சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் 20ம்தேதி மாலை 6 மணி வரை மண்டலம்-6 (திரு.வி.க.நகர்), மண்டலம்-7 (அம்பத்தூர்), மண்டலம்-8 (அண்ணா நகர்), மண்டலம்-9 (தேனாம்பேட்டை), மண்டலம்-10 (கோடம்பாக்கம்)- உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் (டயல் பார் வாட்டர்) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் <https://cmwssb.tn.gov.in> என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.