தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்து, நேற்று 3.5 டன் பட்டுக்கூடுகள் ரூ.17 லட்சத்திற்கு ஏலம் போனது.
தர்மபுரி 4 ரோடு பகுதியில், பட்டு வளர்ச்சித்துறைக்கு சொந்தமான ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பாலக்கோடு, தர்மபுரி, மாரண்டஹள்ளி, ஈரோடு மாவட்டம் சித்தோடு, சத்தியமங்கலம், கரூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகளின் பட்டுக்கூடுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த 48 விவசாயிகள், 3,556 கிலோ வெண்பட்டுக்கூடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். பட்டுக்கூடுகள் வெண்பட்டுக்கூடு கிலோ அதிகபட்சம் ரூ.600க்கும், குறைந்தபட்சம் ரூ.321க்கும், சராசரியாக ரூ.492க்கு ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டுவந்த 3.5 டன் பட்டுக்கூடுகள் ரூ.17.69 லட்சத்துக்கு ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.