கலசபாக்கம், ஜூலை 6: 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களின் நலன் கருதி ரூ.1.48 கோடியில் 1734 நிழல் கூடாரம் அமைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் வாழ்வாதாரத்தை உயர்த்திட இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 399 815 பெண் தொழிலாளர்கள், 231 462 ஆண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு 60% ஒன்றிய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்கீடு செய்து கூலி வழங்குகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவும், பிற்பகல் உணவு சாப்பிடவும் நிழற் கூடாரங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் 1 தொகுப்புக்கு ஒரு நிழல் கூடாரம் ரூ. 8,580 மதிப்பீட்டில் அமைத்திட மாவட்டம் முழுவதும் 1734 நிழற் கூடாரம் அமைக்க ரூ.1 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 720 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 36 715 பெண் தொழிலாளர்கள், 14397 ஆண் தொழிலாளர்கள் என 51 112 தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். கலசபாக்கம் ஒன்றியத்தில் 97 தொகுப்புகளுக்கு தலா ரூ.8,580 கோடியில் கூடாரம் அமைக்க உபகரண பொருட்களை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன், பிடிஓக்கல் பாலமுருகன், ராஜேஸ்வரி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், துணை பிடிஓக்கள் அருள், அருண்குமார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.