ராசிபுரம், மார்ச் 13: ராசிபுரம் அருகே தண்டுமாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில், பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டு மாசி மாதம் 9ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி, மாசி 30ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று, தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, கொட்டும் மழையிலும் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர். தேர் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து பூஜை செய்தனர்.